ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் என திரைப்பட நடிகர் ராதாரவி தெரிவித்தார்.
இளம் திரைப்பட இயக்குநர் ஐக் இயக்கி உள்ள "சங்கிலி புங்கிலி கதவ தொற' என்ற திரைப்படம் வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் திரையிடப்படவுள்ளது. இந்த படத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார். இந்த படம் வெளியிடப்பட இருப்பதைத் தொடர்ந்து, நடிகர் ராதாரவி மற்றும் இயக்குனர் ஐக், நடிகர் ஜீவா ஆகியோர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.
இவர்கள் வியாழக்கிழமை மாலை திருச்சியில் இருந்து சேலம் செல்லும் வழியில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். சுவாமி தரிசனம் செய்த பின்னர் நடிகர் ராதாரவி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
ரஜினிகாந்த் எதுவாக இருந்தாலும் கடவுள் முடிவு எடுப்பார் என்கிறார். எனவே, அவர் எந்த முடிவு எடுத்தாலும் வரவேற்கத்தக்க முடிவுதான். அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன். தமிழக மக்களிடம் அவர் அதிகமான பணம், புகழ் சம்பாதித்துள்ளார். எனவே, இந்த மக்களுக்கு செலவு பண்ணத் தயாராக இருக்கிறார் என நினைக்கிறேன்.
அதனை வரும்போதுதான் பார்க்க வேண்டும். அவர் யார், யாரை நல்லவர் என நினைக்கிறாரோ, அவர்களை வைத்துக் கொள்ளலாம். தீபாவின் கணவர், ஓட்டுநர் எல்லாம் அரசியலுக்கு வரும்போது, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை.
தற்போது பிளவுபட்டுக் கிடக்கும் அதிமுகவில் இருக்க எனக்கு தகுதி இல்லை எனக் கருதுகிறேன். பொதுமக்கள் கருத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும் என உள்ளது. அதிமுகவின் இரு அணிகள் இணைவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றார்.
நாமக்கல் நாடக நடிகர் சங்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ராஜா, சுமதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.