சுமை ஆட்டோ மீது லாரி மோதியதில் மூதாட்டி பலியானார். மேலும் 19 பெண்கள் படுகாயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியைச் சேர்ந்த 21 பெண்கள் சோளத்தட்டு அறுக்கும் பணிக்காக கோம்பைக்காட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்றுவிட்டு மாலை வேலை முடிந்ததும் சுமை ஆட்டோவில் ஊர்த் திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஆட்டோவை தனபால் என்பவர் ஓட்டிச் சென்றார். எருமப்பட்டி கைகாட்டி அருகே சென்றபோது எதிரே மண் எடுப்பதற்காக வந்த டிப்பர் லாரி ஆட்டோ மீது நேருக்குநேர் மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மாரியாயி (70) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆட்டோவில் பயணித்த சித்ரா, லட்சுமி, புஷ்பா, செல்லம்மாள், சுமதி உள்பட 19 பேர் படுகாயமடைந்தனர். ஒருவர் தப்பினார். அனைவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.