நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் ஜூன் 5ஆம் தேதி காலை 9 மணிக்கு நிலக்கடலை மற்றும் ஆமணக்கு சாகுபடி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் என்.அகிலா வெளியிட்ட செய்தி: பயிற்சி முகாமில் நிலக்கடலை மற்றும் ஆமணக்கு சாகுபடியின் முக்கியத்துவம், மண் பரிசோதனை, வீரிய ஒட்டு ரகங்கள், விதை நேர்த்தி செய்தல், விதை உற்பத்தி செய்யும் முறைகள், பயிர் இடை வெளி, விதைக்கும் முறைகள், உரநிர்வாகம் ( நுண்ணூட்ட உரம் மற்றும் உயிர் உரம்), களை நிர்வாகம், பல்வேறு வகையான களைக் கொல்லிகளை உபயோகப்படுத்தும் வழிமுறைகள், நீர் நிர்வாகம், பயிர் வளர்ச்சி ஊக்கி தெளித்தல், ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகம், அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள் மற்றும் கடலை கொடியை சேமிக்கும் முறைகள் மற்றும் தீவனமாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக
விளக்கப்படும்.
இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரில் வந்தோ அல்லது 04286-266345, 266650 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ வரும் ஜூன் 4ஆம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.