பரமத்திவேலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சரகத்துக்கு உட்பட்ட வேலகவுண்டம்பட்டி அருகே மளிக்கைக் கடை நடத்தி வந்தவர் வீட்டில் ஏழரை பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலகவுண்டம்பட்டி கொங்கு பாலாஜி நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருபவர் சுரேஷ் (45). இவர் அப் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். வெள்ளிக்கிழமை காலை சுரேஷ் மளிகைக் கடைக்கு சென்றுவிட்டார். வெள்ளிக்கிழமை என்பதால் அவரது மனைவி பூங்கொடி அருகில் உள்ள கோயிலுக்குச் சென்றார். இந்தநிலையில், மதிய உணவு சாப்பிடுவதர்காக சுரேஷ் நன்பகல் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து வீட்டினுள் சென்று பார்த்துள்ளார். இதில் வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ஏழரை பவுன் தங்க நகை திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சுரேஷ் வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வேலகவுண்டம்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். மேலும், விரல்ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, விரல்ரேகைகளின் மாதிரிகளைச் சேகரித்து, நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.