குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், பொட்டிரெட்டிப்பட்டி கிராமம் போயர் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: போயர் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இப்பகுதி மக்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் ஏதுவும் செய்யப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவை ஏற்றுக்கொண்ட ஆட்சியர், கோட்டாட்சியரிடம் வழங்கி போயர் தெருவை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதன்பின்பு எங்கள் பகுதிக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு தாற்காலிகமாக குடிநீர் வழங்கப்பட்டது.
ஆனால் எங்கள் தெருவில் உள்ள 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்த் தொட்டிக்கு குழாய் இணைப்பு கொடுக்காமல் ஆபரேட்டர் மிரட்டி வருகிறார். இதுகுறித்து ஊராட்சி செயலரிடம் புகார் அளித்தும் எந்தவிட நடவடிக்கையும் இல்லை. எங்கள் பகுதியில் உள்ள 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டும், குடிநீர் இணைப்பு வழங்காத ஆபரேட்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.