ராசிபுரத்தில் குடும்பத் தகராறு காரணமாக தாய் தனது 6 வயது
மகனைக் கொன்றுவிட்டு தானும் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (29). திருச்செங்கோடு பகுதியில் லேத் மெக்கானிக்காகப் பணியாற்றி வரும் இவர், ராசிபுரம் சிவானந்தா சாலை பகுதியைச் சேர்ந்த அம்சா என்பவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டு, ராசிபுரத்தில் வசித்து வந்தார். இத் தம்பதிக்கு 6 வயதில் தீபக் என்ற மகன். இந்நிலையில் அடிக்கடி கார்த்திக் மது அருந்திவிட்டு வந்து குடும்பத்தில் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவும் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்தாராம். இதனால் மன வேதனையடைந்த அம்சா, விஷ மாத்திரை வாங்கி வந்து தனது மகன் தீபக்குக்குக் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டாராம். இதையறிந்த பக்கத்து வீட்டினர் உடனடியாக இருவரையும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து கவலைக்கிடமான நிலையில் இருவரையும் தீவிர சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அதிகாலை அம்சா (29), தீபக் (6) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து ராசிபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.