மயானம் மற்றும் கோயில் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: பேளுக்குறிச்சி கிராமத்தில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் மயான பூமியை ஊராட்சியின் குப்பைக் கிடங்காக மாற்றிவிட்டனர். மயானத்தை ஒட்டி பேளுக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. மயானத்தில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகளால் துர்நாற்றம் ஏற்படுவதுடன், கொசுக்கள் மற்றும் ஈக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
மேலும் மதுரை வீரன் கோயில் பிரிவில் இருந்து நாடார் தெரு வழியாக பழனியப்பர் கோயிலுக்கு செல்லும் வழியை தனியார் ஒருவர் மண் கொட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் எந்த ஒரு வாகனமும் செல்ல இயலாத நிலை உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆற்று ஓடையில் பன்றிகளை வளர்க்கும் கூடாரங்கள் அமைத்து உள்ளனர். இந்தக் கூடாரத்தை அகற்றி பன்றி தொல்லையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேளுக்குறிச்சி பொது மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி பராமரிப்பு இன்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை சீர் செய்து தர வேண்டும்.