தறிப்பட்டறை வைப்பதற்காக ரூ.1.60 லட்சம் கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட வீட்டு பத்திரத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் குழந்தையுடன் பெண் மனுக் கொடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியம், சர்க்கார் மாமுண்டி அருகே காரகுட்டிபாளையத்தைச் சேர்ந்த அன்னலட்சுமி என்பவர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: நானும் எனது கணவர் மாரியப்பனும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேவனாங்குறிச்சி மணமேடு பகுதியில் குடியிருந்து வரும் எனது கணவரின் முதலாளியிடம் தறி ஓட்டுவதற்காக முன்பாக்கியாக ரூ.1 லட்சமும், வீட்டுப் பத்திரத்தின் மீது ரூ.60,000 கடன் பெற்றிருந்தோம். கடந்த 6 மாதம் முன்பு எனது கணவருக்கு உடல் நலம் சரியில்லாத நிலையில் வேலைக்கு போகவில்லை. இதனால் முதலாளி மிரட்டியதால் கணவர் எங்கே சென்றார் என தெரியவில்லை.
எனது கணவரின் முதலாளி என்னையும், எனது மாமனார் மற்றும் எனது கணவரின் அண்ணன் ஆகியோரை மிரட்டி வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டார். திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், எனது கணவரின் முதலாளி மேற்கொண்டு நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வதாக முடித்துக் கொண்டார்.
அந்த வீட்டில் எனது கணவரின் அண்ணனுக்கும் பங்கு உள்ளது. எனவே அவர் வீட்டுப் பத்திரத்தைக் கேட்கிறார். எனவே, எனது கணவரின் முதலாளியிடம் உள்ள வீட்டுப் பத்திரம் மற்றும் எங்களிடம் மிரட்டி கையெழுத்து வாங்கிய வெற்றுப் பத்திரம் ஆகியவற்றை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்குத் தர வேண்டிய ரூ. 1.60 லட்சத்தை 7 மாதத்துக்குள் கட்டி முடித்து விடுகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.