பரமத்தி வேலூர் தினசரி வாழைத்தார் ஏல சந்தையில் கடந்த வாரத்தை விட செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வாழைத்தார்களின் விலை சரிந்தது.
பரமத்தி வேலூர் காவிரி கரையோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர்,திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
பரமத்தி வேலூர் தினசரி வாழைத்தார் ஏல சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 600 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டிருந்தன.
இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ. 500 வரையிலும், ரஸ்தாலி அதிகபட்சமாக ரூ. 300-க்கும், பச்சைநாடன் ரூ. 300-க்கும், கற்பூரவள்ளி ரூ.350-க்கும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.9-க்கு விற்பனையானது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 900-க்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், ரஸ்தாலி ரூ.250-க்கும், பச்சைநாடன் ரூ. 300-க்கும், கற்பூரவள்ளி ரூ. 250-க்கும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 7-க்கு விற்பனையானது. வாழைத்தார் வரத்து அதிகரித்தும் விஷேச நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாததால் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.