நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்கள் விவரத்தினை மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் யு.டி.ஐ.டி. எனும் மத்திய அரசின் இணையதளத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரம் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய புத்தக வடிவிலான அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் நேரில் வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும். திங்கள்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அளவிலான ஒரே மாதிரியான அடையாள அட்டைக்காக மத்திய அரசின் யு.டி.ஐ.டி. இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அளவில் ஒரே மாதிரியான நவீன அடையாள அட்டைகள் வழங்குவதற்காக இந்தப் பணி நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை வழங்கப்பட்டுள்ள புத்தக வடிவிலான காகிதத்திலான மருத்துவ சான்றிதழ்களுடன் கூடிய அடையாள அட்டை விவரத்தை, மத்திய அரசின் யு.டி.ஐ.டி. இணையதளத்தில் பதிவு செய்து அவர்களுக்கு நவீன பல்நோக்கு கணினி பதிவு எண் கொண்ட பிளாஸ்டிக் கார்டு வழங்கப்படவுள்ளது. மாற்றுத்திறனாளிகள் இனிவரும் காலங்களில் கணினி மூலம் அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கும், நாட்டின் அனைத்து இடங்களிலும் செல்லத்தக்கதான எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய வகையில் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட நவீன அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு முகாம்களில் இதுவரை 5,624 மாற்றுத்திறனாளிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யாதவர்கள் உடனடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.