திருச்செங்கோட்டை அடுத்த மல்லசமுத்திரம் அருகே மீண்டும் பேருந்து இயக்கக் கோரி பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மல்லசமுத்திரம் பேருந்து நிலையத்துக்கு சேலம் மாவட்டம், சங்ககிரி வைகுந்தம், காளிபட்டி வழியாக பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இப் பேருந்தை இப்பகுதி மக்களும், வியாபாரிகளும், மாணவர்களும் பயன்படுத்தி வந்தனர். இப் பேருந்துகள் முன் அறிவிப்பு ஏதுமின்றி திடீரென கடந்த சில நாள்களாக நிறுத்தப்பட்டன.
பேருந்து வராததால் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந் நிலையில் வியாழக்கிழமை காலை கரட்டுவளவு என்ற இடத்தில் வந்த அரசுப் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த மல்லசமுத்திரம் காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். ஆனால், பொதுமக்கள் மறியலைத் தொடர்ந்ததால், போராட்டத்தில் ஈடுபட்டதாக 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.