திருச்செங்கோட்டில் புதன்கிழமை இரவு கன மழை பெய்தது. இங்கு ஒரே நாள் இரவில் 104 மி.மீ. அளவு மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, குமாரபாளையம், ராசிபுரம் பகுதிகளில் புதன்கிழமை இரவு பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக திருச்செங்கோட்டில் 104 மில்லி மீட் டர் மழை பதிவானது.
திருச்செங்கோடு வட்டாரத்தில் புதன்கிழமை இரவு 12 மணி முதல் வியாழக்கிழமை அதிகாலை 4 மணி வரை கனமழை பெய்தது. இதனால், சாலையில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. கன மழையால் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே அம்மன் குளம் நிரம்பியது.
மழையால் மானாவாரியாக சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை, துவரை பயிர்கள் நல்ல விளைச்சலைத் தரும் என விவசாயிகள் தெரிவித்தனர். வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்):
திருச்செங்கோடு 104, குமாரபாளையம் 83, ராசிபுரம் 52.10, மங்களபுரம் 52, புதுச்சத்திரம் 12, சேந்தமங்கலம் 3.40, நாமக்கல் 2 என மொத்தம் 308.50 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.