நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், சின்னபெத்தாம்பட்டி ஊராட்சி அலுவலக வளாகத்தில் சிறப்பு மனுநீதி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் கோட்டாட்சியர் எம். ராஜசேகரன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பிரகாசம் ஆகியோர் அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து பேசினர். வளையப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் பழனிசாமி, டெங்கு பரவும் விதம், அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள், சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.
மோகனூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாந்தி, உதவி வேளாண்மை அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசன மானியம் குறித்து விளக்கினர்.
முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. அதன்படி 6 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா, முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரணமடைந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு நிதி உதவியும் வழங்கப்பட்டது.
மேலும் 4 பேருக்கு திருமண நிதி உதவியும், வாரிசு சான்றிதழ் என மொத்தம் 28 பயனாளிகளுக்கு ரூ. 3.44 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை, கோட்டாட்சியர் வழங்கினார். வளையப்பட்டி வருவாய் ஆய்வாளர் சந்திரசேகரன், கிராம நிர்வாக அலுவலர் நல்லசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புரட்டாசி பெளர்ணமி:
ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜை
நாமக்கல், அக். 5: நாமக்கல் ராமாபுரம்புதூர் ஸ்ரீசக்கரத்தாழ்வார் கோயிலில் பெளர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொழில், கல்வி, ஆரோக்கியம் சிறக்க யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து மூலவர், உற்சவருக்கு பல்வேறு மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகள் சூட்டப்பட்டு வெண் பட்டாடை அணிவிக்கப்பட்டது. சிறப்பு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று,மட்டை உறிக்காத காய்ந்த முழு தேங்காயை சுவாமியிடம் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து ஒரு முகம் மற்றும் நான்கு முகம் விளக்கால் தீபாராதனையும் நடைபெற்றது.