புதை சாக்கடை திட்டப் பணியின்போது மணல் சரிந்து 2 தொழிலாளர்கள் திணறல்

ராசிபுரம் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தில் பணியின்போது 8 அடி ஆழத்தில்  மண் சரிவில் சிக்கி உயிருக்குப் போராடிய  இரு தொழிலாளிகளை பொதுமக்கள் மீட்டனர்.

ராசிபுரம் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தில் பணியின்போது 8 அடி ஆழத்தில்  மண் சரிவில் சிக்கி உயிருக்குப் போராடிய  இரு தொழிலாளிகளை பொதுமக்கள் மீட்டனர்.
ராசிபுரம் நகரில் ரூ. 56 கோடி மதிப்பில் புதைகுழி சாக்கடை திட்டம் கடந்த 3 ஆண்டுகளாக குடிநீர் வடிகால் வாரியத்தின் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.
இந்தத் திட்டப் பணிகளால் நகரில் ஆங்காங்கே குழிகள் வெட்டப்பட்டு சாலைகள் சேதமடைந்து வாகன நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகளும் அதிகளவில் ஏற்படுகின்றன. இந்த நிலையில், ராசிபுரம் 10-ஆவது வார்டு வி.நகர் 18-ஆவது சாலையில்  புதை சாக்கடைக்காக குழி தோண்டும் பணியில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனர். ஜேசிபி இயந்திரம், துளையிடும் இயந்திரம் ஆகியவற்றை பயன்படுத்தி இப் பணியில் பலர் ஈடுபட்டிருந்தபோது, நாமக்கல் பீமநாயக்கனூர் முத்து (22), துறையூர் பகுதியைச் சேர்ந்த சதீஸ் (19) ஆகிய இரு தொழிலாளர்கள் 8 அடி ஆழ குழியில் இருந்தனர்.
இந்த நிலையில், மழை காரணமாக மணல் ஈரப்பதத்துடன் இருந்ததால், தொழிலாளர்கள் மீது மணல் சரிந்தது. இதனால் புதை மணலில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு மூவரும் உயிருக்குப் போராடினர்.  அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பிற தொழிலாளர்களும், பொதுமக்களும் மணலில் சிக்கிக் கிடந்த மூவரை மீட்டனர்.  பின்னர் ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு மூவரும் மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் நிகழ்விடத்துக்குச் சென்று காவல் துறையினர்,  நகராட்சி அலுவலர்கள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com