கொல்லிமலையில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்ததால், ஆகாயகங்கை அருவியில் குளிக்க புதன்கிழமை தடை விதிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு தொடங்கிய மழை புதன்கிழமை அதிகாலை 3 மணி வரையிலும் கொட்டித் தீர்த்தது. மழையால் நள்ளிரவு வாசலூர்பட்டி அருகே தேப்பகுளம்பட்டி காட்டாற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை நீர் பெரியகோயிலூர் ஆற்றுக்கு செல்வதால், ஆகாயகங்கை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
இதனால், புதன்கிழமை காலை முதல் ஆகாயகங்கை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பார்வையிடவும் வனத் துறையினர் தடை விதித்துள்ளனர். ஆகாயகங்கை நீர் வீழ்ச்சிக்கு செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தண்ணீர் வரத்து குறைந்தால் அருவிக்கு செல்ல வியாழக்கிழமை அனுமதி அளிக்கப்படும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பலத்த மழையால் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள காரவள்ளி பெரிய ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.