மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு டெங்கு கண்டறிய ரத்த பரிசோதனை கருவியை வழங்கிய எம்.எல்.ஏ. பொன்.சரஸ்வதி டெங்கு விழிப்புணர்வு முகாமை புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
மல்லசமுத்திரம் நகரம், பேரூராட்சி பகுதிகளில் திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் நிதியில் கட்டப்பட்ட பொது கழிப்பிட கட்டடத்தை பொன்.சரஸ்வதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். சந்தைப்பேட்டை பகுதியில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு முகாமில் நிலவேம்பு கசாயம் வழங்கி பொதுமக்கள் சுற்றுப்பாதை தூய்மையாக வைத்துக்கொள்ளவும், காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை நாடி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு டெங்கு கண்டறிய ரத்த பரிசோதனை கருவியினை வழங்கினார். மல்லசமுத்திரம் ஏரியை பார்வையிட்டார். மல்லசமுத்திரம் பேரூராட்சி நகரச் செயலர் சுந்தர்ராஜன் மற்றும் பலர் உடனிருந்தனர்.