குமாரபாளையத்தில் விசைத்தறிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ், 75 சதவீத கூலியுயர்வு வழங்கக் கோரி புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன் சிஐடியு, ஏஐடியுசி தொழில்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு நகரத் தலைவர் ஜி.மோகன், ஏஐடியுசி பொது தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலர் கே.எஸ்.பாலசுப்பிரமணி ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அசோகன், மாவட்டச் செயலர் எம்.ஆர்.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான விசைத்தறித் தொழிலாளர்கள் மிகக் குறைந்த கூலி பெற்றுக் கொண்டு, கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். எனவே, தீபாவளிப் பண்டிகைக்கு விசைத்தறித் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ், 75 சதவீத கூலியுயர்வு வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சிஐடியு சேலம் மாவட்டச் செயலர் எஸ்.கே.சேகர், ஏஐடியுசி மாவட்ட துணைத் தலைவர் எஸ்.பி.நஞ்சப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் கே.பாலுசாமி, நிர்வாகிகள் மாரிமுத்து, ஆறுமுகம், பி.என்.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.