பரமத்தி வேலூர் சேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கொப்பரை தேங்காயின் வரத்து குறைந்து, விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் தேங்காய்களை உடைத்து, அதன் பருப்புகளை சிறு வியாபாரிகள் வியாழக்கிழமை பரமத்தி வேலூர், வெங்கமேட்டில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வருகின்றனர். இங்கு தரத்துக்கு தகுந்தார் போல் மறைமுக ஏலம்
விடப்படுகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 3 ஆயிரத்து 190 கிலோ கொப்பரைத் தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.109.10-க்கும், குறைந்த பட்சமாக ரூ.101.59-க்கும், சராசரியாக ரூ.106.60-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட்சத்து 4 ஆயிரத்து 610-க்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு ஆயிரத்து 724 கிலோ கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.110.99-க்கும் குறைந்த பட்சமாக ரூ.103.65-க்கும், சராசரியாக ரூ.108.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 290-க்கு வர்த்தகம் நடைபெற்றது. விலை உயர்வடைந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.