கன மழை காரணமாக சேந்தமங்கலம் பகுதியில் ஓடைகளில் ஏற்பட்டுள்ள உடைப்பைச் சீரமைக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் சி.சந்திரசேகரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் கடந்த 10 ஆம் தேதி இரவு பெய்த பலத்த மழையினால் காட்டாறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக கொல்லிமலை அடிவாரப் பகுதியான சேந்தமங்கலம் வட்டம், நவலடிப்பட்டி, வரகூர், திப்ரமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓடைகளில் உடைப்பு ஏற்பட்டு, அப் பகுதியில் சுமார் 100 ஏக்கர் விளை நிலங்களில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் அங்கு பயிரிடப்பட்டிருந்த மரவள்ளி, வெங்காயம், சோளம் உள்ளிட்ட பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
பாதிக்கப்பட்ட பகுதிகளை சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சி.சந்திரசேகரன் வியாழக்கிழமை பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி, அரசிடம் உரிய இழப்பீடு பெற்றுத் தரப்படும் என உறுதியளித்தார். அப்போது பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம், ஓடைகளில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளிடம் மணல் மூட்டை அடுக்கி சரிசெய்ய அறிவுறுத்தினார்.
மேலும், அப் பகுதி விவசாயிகள், கொல்லிமலை அடிவாரத்திலிருந்து வரும் மழை நீர் வழிப்பாதை பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால்தான் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளதாக புகார் தெரிவித்தனர். நீர் வழிப் பாதையை முழுமையாக ஆய்வுசெய்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கையெடுக்கப்படும் என எம்எல்ஏ உறுதியளித்தார்.
பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் முரளி, சேந்தமங்கலம் வட்டாட்சியர் செல்வராஜ், அதிமுக பேரூர் செயலர் பாலுசாமி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.