குமாரபாளையம் நகராட்சியில் சொத்து வரி உயர்வு, குப்பை அள்ள வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளைக் கண்டித்து திமுக சார்பில் கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டதோடு, வரி உயர்வைத் திரும்பப் பெறக் கோரி வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்களின் பரப்பளவை அளவிட்டு, அதற்கேற்ப புதிய வரிகள் பலமடங்கு விதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், நகராட்சியின் முக்கியப் பணியான குப்பைகளைச் சேகரிக்க, சொத்து வரி அடிப்படையில் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இவ் வரி விதிப்பைக் கைவிட வலியுறுத்தி திமுக மாவட்டத் துணைச் செயலர் எஸ்.சேகர் முன்னிலையில் திமுகவினர் ஊர்வலமாக நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். தொடர்ந்து, திமுக நகரச் செயலர் கோ.வெங்கடேசன் தலைமையில் நகராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இப் புதிய வகையிலான வரி விதிப்பைக் கைவிட வேண்டும் எனவும், தொடர்ந்து வரி உயர்வு அமல்படுத்தப்பட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.