நாமக்கல் மாவட்டம், அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளி சார்பில் விவசாயத்தை காப்பது குறித்த விழிப்புணர்வுப் பேரணி மோகனூரில் வியாழக்
கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு லிட்டில் ஏஞ்சல் பள்ளிகளின் தலைவர் வெங்கடாசலம், செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மோகனூர் காவல் நிலையம் முன் துவங்கிய பேரணியை பள்ளியின் முதல்வர் தமிழ்செல்வி துவக்கி வைத்தார். பேரணி மோகனூரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. பேரணியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விவசாயத்தைக் காப்பது, மழை நீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு, ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுவதை தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து விவசாயத்தைக் காப்பது குறித்த தெரு நாடகத்தையும் மாணவ, மாணவிகள் நடத்தினர். இந் நிகழ்ச்சியில், அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் இன்க்லைன் நிறுவன நிறுவனர் யுவராஜ் நன்றி கூறினார்.