பரமத்தி வேலூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சரகத்துக்கு உட்பட்ட வேலகவுண்டம்பட்டி அருகே புதன்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், முதியவர் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கட்டிபாளையத்தில் நடந்து சென்றவர் மீது புதன்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த முதியவரை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே முதியவர் உயிரிழந்தார். விபத்தில் இறந்து போனவருக்கு சுமார் 55 வயது வரை இருக்கலாம். இவர் யார், எந்த ஊர் என்பது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.