நல்லூர் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த மின்பாதை ஆய்வாளர் நிகழ்விடத்திலேயே பலியானார்.
நல்லூர் துணை மின் நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சீனிவாசன் (58).
இவர், வழக்கம்போல பரமத்தி-திருச்செங்கோடு சாலையில் சனிக்கிழமை காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே கெங்கணாபுரத்தைச் சேர்ந்த தங்கராஜ் (35) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சீனிவாசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த தங்கராஜ் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.