கொல்லிமலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஆகாய கங்கை அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வியாழக்கிழமை 6-ஆவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 13 நாள்களில் சுமார் 300 மி.மீ அளவு மழைப் பதிவாகியுள்ளது. இதனால் வறண்டு கிடந்த ஆகாய கங்கை அருவி, மாசிலா அருவி, நம்மருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
இரவு நேரங்களில் பெய்யும் மழையால், காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பி வருகின்றன. கடந்த சில நாள்களாக சின்ன கோவிலூர், பெரிய கோவிலூர், தெம்பளம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்வதால், அங்குள்ள காட்டாறுகளில் பெருக்கெடுத்த தண்ணீர் ஆகாய கங்கை அருவியில் செந்நிறத்தில் கொட்டுகிறது.
நீர்வரத்து அதிகரிப்பால் ஆகாய கங்கையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வியாழக்கிழமை 6-ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் நுழைவுவாயில் பூட்டப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.