எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா நடைபெறவுள்ள நிலையில் நாமக்கல்லில் நகரில் சனிக்கிழமை ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாகத் தரை இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல்லில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் வருவதால் போலீஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சனிக்கிழமை பகல் 1.30 மணியளவில் நாமக்கல் நகரில் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர், நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தரை இறங்கியது. அதிலிருந்து இறங்கிய 8 பேர் அங்கு தயாராக இருந்த கார்களில் ஏறிச் சென்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, கும்பகோணத்தைச் சேர்ந்த கணேஷ், அபினேஷ் ஆகியோர் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் நகைக் கடை வைத்துள்ளனர். அவர்கள் சிங்கப்பூரில் இருந்து சென்னை வழியாக கோவை வந்தனர்.
தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாமக்கல் வந்து, ஆஞ்சநேயர் சுவாமியை வழிபட்டுச் சென்றனர் என்றனர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ள நிலையில் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென நாமக்கல் நகரில் தரை இறங்கியது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.