பல ரகசியங்களை வெளியிடுவேன்

தினகரன் என்னை தொடர்ந்து விமர்சித்தால், வரும் காலங்களில் பல ரகசியங்களை வெளியிடுவேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தினகரன் என்னை தொடர்ந்து விமர்சித்தால், வரும் காலங்களில் பல ரகசியங்களை வெளியிடுவேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
 எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்களை நம்பினார், மக்கள் அவரை நம்பினர். ஜெயலலிதா கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை, அவருடைய உண்மை தொண்டர்களாக உள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா மக்களுக்கு சேவை செய்ய வழங்கிய அட்சய பாத்திரம் இப்போது விசுவாசத் தொண்டர்களிடம் உள்ளது.
 ஜெயலலிதா ஏற்படுத்திக்கொடுத்த இந்த ஆட்சி தொடரக் கூடாது என சிலர் திட்டம் போடுகிறார்கள். இந்த சதித் திட்டத்தை தவிடு பொடியாக்கும் ஆற்றல், அவருடைய விசுவாசத் தொண்டர்களிடம் உள்ளது. எதிரிகள், துரோகிகளை எப்படி எதிர்கொள்வது என்பதை ஜெயலலிதா எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.
 தற்போது நடைபெற்றுவரும் நல்லாட்சிக்கு பல்வேறு இடையூறுகளை செய்து ஆட்சியைக் கவிழ்க்க பார்க்கிறார்கள்.
 நானும், எடப்பாடி பழனிசாமியும் சாதாரண நிலையில் இருந்து தான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளோம். எங்களை பார்த்து சுய நலத்திற்காக இணைந்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் சுய நலத்துக்காக ஒரு குடும்பத்தில் கட்சியையும், ஆட்சியையும் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர், முடியாததால் இவ்வாறு பேசுகின்றனர்.
 அவர்கள் ஜெயலலிதாவுக்கு உண்மையானவர்கள் இல்லை. 2014 ஆம் ஆண்டில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 16 பேரை கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கினார்.
 ஏற்கெனவே சசிகலா குடும்பம் குறித்த ரகசியத்தில் 10 சதவீதம் சொல்லி உள்ளேன். இது 1 சதவீதம், இன்னும் 89 சதவீதம் உள்ளது. அவர்கள் தொடர்ந்து என்னை ஏதாவது சொன்னால், நானும் தொடர்ந்து பல ரகசியங்களை சொல்வேன் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com