மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மக்களிடம் அமைதி நிலவவும் திருச்செங்கோடு இளைஞர் நூதன போராட்டத்தில் சனிக்கிழமை திருச்செங்கோடு திருமலையில் ஈடுபட்டார்.
திருச்செங்கோடு சூரியம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (30). இவர் இறைச்சி விற்பனைக் கடையில் வேலை செய்து வருகிறார். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருவதையும், நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டாத மாநில அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டியும் நூதன போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தார். அதன்படி, திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் மலை அடிவாரத்தில் இருந்து திருமலைக்குச் செல்லும் படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியிலும் தண்டால் போட்டுக் கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கோஷமிட்டுக் கொண்டு மொத்தமுள்ள 1156 படிகளையும் ஏறிக் கடந்து, திருமலையை அடைந்தார்.
உருமி மேளம் முழங்க காலை 9.50 மணிக்குத் துவங்கிய இந்த நூதனப் போராட்டம் 11 மணிக்கு நிறைவடைந்தது.