குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பலத்த காற்றுடன் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் அடித்து வருவதால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே நடமாடமுடியாத நிலை காணப்பட்டது. வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன.
தொடர்ந்து, பலத்த காற்று வீசியதால் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த கடைகளின் விளம்பரத் தட்டிகள் காற்றில் பறந்தன. சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலையின் பல இடங்களில் சாலையோர மரங்கள், வீடுகளில் வளர்க்கப்பட்ட மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து, பலத்த காற்றுக்கிடையே கனமழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பெய்த கனமûழால் வெயிலின் தாக்கம் குறைந்து காணபட்டதோடு, இதமான சூழலும் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.