குமாரபாளையம் அருகே தடையின்றி குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால்(படம்) ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை சிற்றூராட்சிக்குள்பட்ட காவடியான்காடு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சிற்றூராட்சி நிர்வாகம் சார்பில், தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக போதிய அளவுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து, சிற்றூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஏமாற்றமடைந்த இக்கிராம மக்கள் காலிக் குடங்களுடன் குமாரபாளையம் - திருச்செங்கோடு சாலையில் காவடியான்காடு பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த குமாரபாளையம் காவல் ஆய்வாளர் வேலுத்தேவன், வருவாய் ஆய்வாளர் ஏ.ரவிச்சந்திரன் மற்றும் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.
இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.