குமரமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் தங்கவேல், கந்தசாமி,ரங்கசாமி, உள்ளிட்ட பலர் பேசினர். கூட்டத்தில் இந்தி மற்றும் வடமொழி திணிப்பைக் கைவிட வேண்டும். நாடாளுமன்றத்தில் அவரவர் தாய் மொழியில் பேசிட வழிவகை செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும். மருத்துவம்,பொறியியல் உள்ளிட்ட உயர்படிப்புகளை தமிழில் படித்திட வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். தமிழை பயிற்று மொழியாக கொண்டு பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழை பயிற்று மொழியாக, நீதிமன்ற மொழியாக, நிர்வாக மொழியாக வளர்த்திட அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழ் வளர்ச்சி நாளாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.