பரமத்தி வேலூர் அருகே காமாட்சி நகரில் முன்னால் சென்ற காரை முந்த முயன்ற மினி ஆட்டோ கவிழ்ந்து 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாலப்பட்டியயைச் சேர்ந்தவர் கோகுல் (21). இவர் சனிக்கிழமை இரவு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவரது உடல் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதற்காக அவரது உறவினர்கள் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் மினி ஆட்டோவில் வந்த 14 பேர் மீண்டும் பாலப்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். பரமத்தி வேலூர் அருகே காமாட்சி நகர் அருகே சென்றபோது முன்னால் சென்ற காரை ஆட்டோவின் ஓட்டுநர் முந்த முயன்றுள்ளார். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்தது. இதில் மினி ஆட்டோவில் வந்த பாலப்பட்டியைச் சேர்ந்த காளியப்பன் (62),ரத்தினம் (65),பழனியம்மாள் (50), திருச்சி மாவட்டம் உன்னியூரைச் சேர்ந்த மீனாட்சி (38),சின்னபள்ளிபாளையத்தைச் சேர்ந்த தீபா (33),கரூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி (55) உள்ளிட்ட 14 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அனைவரும் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.