திருச்செங்கோட்டை அடுத்த பொம்மக்கல்பாளையம் குட்டையில் தவறி விழுந்த இரு சிறுவர்களில் ஒருவர் இறந்துவிட்ட நிலையில், இரு நாள்களாக சிகிச்சை பெற்று வந்த மற்றொரு சிறுவனும் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
ஆண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாரிச்சாமி, நீலா தம்பதியரின் மகன் பூவரசன் (8), சேலம் மாவட்டம் தாரமங்கலத்தைச் சேர்ந்த பாட்டப்பன் மகன் பிரபாகரன் (10) இருவரும் தங்களது உறவினரான நீலாவின் தங்கை கோகிலாவுடன் துணிதுவைக்க குட்டைக்குச் சென்றுள்ளனர். கோகிலா கவனிக்காத நேரத்தில் சிறுவர்கள் இருவரும் குட்டைக்குள் தவறி விழுந்தனர். சப்தம் கேட்டு சுதாரித்த கோகிலா அருகில் இருந்தவர்கள் துணையுடன் சிறுவர்கள் இருவரையும் குட்டையிலிருந்து மீட்டனர். சிறுவன் பூவரசன் சிகிச்சை பெறும் முன் உயிரிழந்தார். சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் இரு நாள்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு ஊரக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.