பரமத்தி வேலூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சரகத்திற்கு உட்பட்ட வேலகவுண்டம்பட்டி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியானார். விபத்து குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மானத்தியைச் சேர்ந்தவர் நல்லையகவுண்டர் (65). கூலித் தொழிலாளி. இவர் செவ்வாய்க்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில் நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் சென்று கொண்டிருந்தார். ஈரோடு மாவட்டம், நஞ்செய் ஊத்துக்குளியைத் சேர்ந்த மகேஷ்குமார் (35) தனது இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். முன்னால் சென்று கொண்டிருந்த நல்லையகவுண்டரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார். இதில் நல்லையகவுண்டர் படுகாயமடைந்து நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த மகேஷ்குமார் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.