நெகிழிப் பொருட்களை தடைசெய்வது குறித்து விவாதிக்க நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளில் திங்கள்கிழமை கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் திங்கள்கிழமை கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களை தடைசெய்வது குறித்து விவாதிக்கப்படுகிறது. நெகிழிப் பொருட்கள் தயாரித்தல், இருப்பு வைத்தல், விநியோகம், விற்பனை மற்றும் இடமாற்றம் ஆகியவை தடை செய்யப்படுகின்றன.
ஊராட்சியில் செயல்படும் டீ, பெட்டிக் கடைகள், ஹோட்டல், மளிகை மற்றும் பல்பொருள் அங்காடிகளில் தடிமன் வேறுபாடின்றி ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களை உபயோகப்படுத்தாமல் இருக்க கிராமசபைக் கூட்டத்தில் வலியுறுத்தப்படும். இந்த கிராம சபை கூட்டங்களில் மக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு நெகிழிப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்.