திருச்செங்கோடு பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் குழந்தை உட்பட நான்கு பேர் ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்தனர்.
திருச்செங்கோடு அடுத்த கூட்டபள்ளி பகுதியில் வேட்டுவம்பாளையத்தைச் சேர்ந்த கோயில் பூசாரி குணசேகரன்(35) தனது மகள் இலக்கியா(12) உடன் இருசக்கர வாகனத்தில் திருச்செங்கோடு நோக்கி வந்து கொண்டிருந்த போது, அவரது வாகனத்துக்குப் பின்னால் கூட்டப்பள்ளியை சேர்ந்த தாஸ் என்பவர் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தார்.
அப்போது சரக்கு வாகனம் தாறுமாறாக குணசேகரன் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதனால் இரு சக்கர வாகனத்தில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தின் மீது மோதிய சரக்கு வண்டி பேருந்திற்காக சாலையின் ஓரம் காத்திருந்த வருகூராம்பட்டியை சேர்ந்த கதிர்வேல்(50) தோட்டக்கூர்பட்டியை சேர்ந்த அமுதா(48) ப புதுச்சத்திரத்தை சேர்ந்த நரசிம்மராஜன்(45) மூவரின் மீதும் மோதியது. அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி குணசேகரனும், மகள் இலக்கியாவும் உயிரிழந்தனர். மற்ற மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருச்செங்கோடு- ஈரோடு சாலையில் வேலாத்தா கோயில் பகுதியில் ஈரோடு அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த மகபூப்அலி(48) , மனைவி நிஜாமா(40) மகள் சகானா(29), சகானாவின் 10 மாத பெண் குழந்தை அஸ்ராவுடன் ஈரோடு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் மோதியுள்ளது. கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட குழந்தை சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது. இவர்கள் மீது மோதிய கார் நிற்காமல் சென்று விட்டது.
கைலாசம்பாளையத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி விஜயலட்சுமி(55) திருச்செங்கோட்டிலிருந்து தனியார் பேருந்தில் ஏறி கைலாசம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கும் போது நிலை தடுமாறி விழுந்தார். விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி உயிரிழந்தார். இந்த மூன்று விபத்து சம்பவங்கள் குறித்து திருச்செங்கோடு புறநகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.