நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வரகூராம்பட்டியில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி, திருச்செங்கோட்டில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையக் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிகளில் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர்.பி.ஆர்.சுந்தரம், திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வரகூராம்பட்டியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.62.30 கோடி மதிப்பீட்டில் 720 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டடம் கட்டுவதற்கான பணியினையும், திருச்செங்கோட்டில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையக் கட்டடம் கட்டுவதற்கான பணியினையும், பூமி பூஜையிட்டு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார்.
இந் நிகழ்ச்சிகளில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர்.வெ.பாஸ்கரன் உட்பட தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய அலுவலர்கள், வேளாண்மைத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.