ராசிபுரம் அருகே தண்ணீர்பந்தல்காடு கும்பக்கொட்டாய் பகுதியில் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் இருந்து ரூ. 3 லட்சம் பணம், நகைகள் கருகியது.
தண்ணீர்பந்தல்காடு கும்பகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (32). இவர், தனியார் வெல்டிங் பட்டறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா கூலிவேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்து பயங்கர சத்தத்துடன் குடிசை தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளையும் வெடித்து தீ மளமளவெனப் பரவியது. தகவல் அறிந்த ராசிபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் நிகழ்விடம் சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்து காரணமாக வீட்டு பீரோவில் இருந்த ரூ. 3 லட்சம் ரொக்கம் சாம்பலானது. 15 பவுன் நகைகள் சிறிது சேதத்துடன் மீட்கப்பட்டது. 10 பவுன் கருகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், வீட்டிலிருந்த கட்டில், படுக்கை உள்ளிட்ட பொருள்களும், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களும் எரிந்து சாம்பலாகின. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து நாமகிரிபேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.