நாமக்கல்லை குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இல்லாத மாவட்டமாக மாற்றிட அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் குழந்தைகளின் உரிமைகள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான திறன் வளர்ப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு முன்னிலை வகித்தார். தலைமை வகித்து ஆட்சியர் மு.ஆசியா மரியம் பேசியது:
குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள், குழந்தைகளுக்கான உரிமைகள் அதனைப் பெற்று தருவதற்கான பணிகளையும், குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு ஆட்சியர் தலைமையில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு செயல்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உள்ளிட்ட 5 அலகுகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் குழந்தைத் தொழிலாளர் இல்லாத நிலையினை உருவாக்கிட பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனைத்து துறை அலுவலர்களும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற உதவ வேண்டும் என்றார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டி.ரஞ்சிதப்பிரியா வரவேற்றார். தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் எஸ்.பி.மோகன், சமூக பாதுகாப்பு துறையின் ஓய்வு பெற்ற குழந்தைகள் உளவியலாளர் எஸ்.ராமநாதன் ஆகியோர் பேசினர்.
முகாமில் காவல் துறை அலுவலர்கள், பணியாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள், தொண்டு நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் நிறுவனம் சார்ந்த குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எ.ஜெயந்தி நன்றி கூறினார்.