பரமத்திவேலூர் காமராஜர் பேருந்து நிலையத்தில் இயங்கும் கடைகள் குடிநீர் இன்றி தவிப்பதாக தினமணி வெளியிட்ட செய்தியின் எதிரொலியாக தற்போது பேருந்து நிலைய கடைகளுக்கு குடிநீர் வழங்க பேரூராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பரமத்தி வேலூர் காமராஜர் பேருந்து நிலையத்தில் தற்போது டீக்கடை, புத்தகக் கடை, பழங்கள் விற்பனை கடை உள்ளிட்ட கடைகளும், தாய்மார்கள்கள் பாலுட்டுவதற்காக ஒரு கடையும் உள்ளன. இங்குள்ள கடைகளுக்கு விநியோகிப்பதற்கென மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டு அதிலிருந்து கடைகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு குடிநீர் ஏற்றுவதற்கான மின் மோட்டார் பழுது அடைந்ததால் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக தண்ணீர் விநியோகிக்ப்படவில்லை. இதனால் கடை உரிமையாளர்கள் தவித்து வந்தனர். பயணிகளும் குடிநீர் இன்றி தவித்தனர். பேருந்து நிலையத்தில் நிலவும் இந்த அவல நிலை குறித்து தினமணி செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை காலை அதிரடி நடவடிக்கை எடுத்தனர். குடிநீர் தொட்டியிலிருந்து தாற்காலிக மின் மோட்டார் அமைத்து கடைகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் கடைக்காரர்கள், பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.