குமாரபாளையத்தில் புதிதாக திறக்கப்பட்ட நகர்புற சுகாதார நிலையத்தில் முதல் முறையாக சுகப் பிரசவத்தில் பிறந்த முதல் பெண் குழந்தைக்கு பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டதோடு, பெற்றோருக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
குமாரபாளையம் நகராட்சி, மாரக்காள்காட்டைச் சேர்ந்தவர் செளந்திரராஜன் (25). இவரது மனைவி சசிரேகா (22). இவர்களுக்குத் திருமணமாகி ஓராண்டாகிறது. கர்பிணியான சசிரேகா, அப்பகுதியில் உள்ள நகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று வந்தார்.
நிறைமாத கர்பிணியான சசிரேகா, நகராட்சி நகர்நல மையத்தில் பிரசவத்துக்கு சேர்ந்தார். அங்கு, ஞாயிற்றுக்கிழமை சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. நவீன வசதிகளுடன் இம்மருத்துவனை திறக்கப்பட்டதில் முதன் முதலாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, இக்குழந்தைக்கு பரிசு பெட்டகம் வழங்கப்பட்டதோடு, பெற்றோருக்கும் செவ்வாய்க்கிழமை பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
இம்மருத்துவமனை கடந்த ஆண்டு மே மாதத்தில் திறக்கப்பட்டு, அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில், குமாரபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், மருத்துவர் காயத்ரி, வட்டாட்சியர் ஆர்.ரகுநாதன், நகராட்சி ஆணையர்ஆர்.மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்று பாராட்டுத் தெரிவித்தனர்.