வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்ய வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் பூங்கா சாலையில் இந்திய தொழிலாளர் பேரவை சார்பில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, நாமக்கல் மாவட்டச் செயலாளர் கே.வெங்கடாசலம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சந்திரன், ராசிபுரம் நகரச் செயலாளர் ராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை பாமக மாநில மாணவர் சங்க ஆலோசகர் நல்வினை விஸ்வராஜ் துவக்கி வைத்தார்.
மணல் விலை உயர்வினால் கட்டுமானப் பணி முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மணல் விலையைக் குறைக்க வேண்டும். மேலும் வெளி நாடுகளில் இருந்து மணலைத் தர ஆய்வு செய்து, தமிழக அரசே இறக்குமதி செய்து, எளிய முறையில் ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்து, விற்பனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட துணைச் செயலாளர் மாதேஸ்வரன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய தொழிலாளர் பேரவை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.