திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை சார்பில் அர்த்தநாரீஸ்வரர் திருமலையில் அக்னி சாந்தி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் தமிழக கோயில்களில் நிகழ்ந்த தீ விபத்துகளுக்கு பரிகார பூஜையாக அக்னி சாந்தி பூஜையை தேசிய சிந்தனை பேரவைத் தலைவர் திருநாவுக்கரசு, நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டு நடத்தினர்.
அதைத் தொடர்ந்து கோவை கந்தலோகம் மடாலய பீடாதிபதி முருகனடிமை ஸ்ரீ பாஸ்கரானந்தா சுவாமிகள் தலைமையில் தங்கத் தேரோட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பத்தர்கள் கலந்து கொண்டு தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்தனர் . நிகழ்ச்சியில் பேசிய கந்தலோகம் சுவாமிகள் , தமிழக இந்து அறநிலையத்துறை கீழ் உள்ள கோயில்களை சற்று எச்சரிக்கையுடன் பாதுகாத்திட வேண்டும். எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளை கோயில் வளாகத்தில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும்.
திருச்செங்கோடு கிரிவல பாதைகளில் பக்தர்களுக்கு சுகாதார வசதிகள் செய்து தரவேண்டும் . 47 ஆண்டுகளாக உற்சவம் நடைபெறாமல் இருக்கும் திருச்செங்கோடு கைலாசநாதர் ஆலயத்தில் தைப்பூச தேர் திருவிழாவை மீண்டும் நடத்திட தமிழக அரசு ஏற்பாடுகள் செய்திட வேண்டும் என்றார். பூஜையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.