பரமத்தி வேலூர் நகரப் பகுதியில் ஆகாயத் தாமரை செடியின் தண்டுகளுக்கு வர்ணம் பூசி பூச்செடி எனக் கூறி ஏமாற்றி விற்பனை செய்த வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களிடம் பரமத்தி வேலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி வேலூரில் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் உள்பட 5 பேர் காவிரி ஆற்றில் உள்ள ஆகாயத் தாமரையைப் பறித்து அதன் இலைகளை துண்டித்து விட்டு தண்டுகளில் பல வர்ண சாயங்களைப் பூசி வண்ணப் பூச்செடிகள் எனவும், ஒரு செடியின் விலை ரூ. 15 எனவும் பொதுமக்களிடம் விற்பனை செய்தனர்.
இதை ஏராளமான பொதுமக்களும் நம்பி வாங்கிச் சென்றனர். ரோந்துப் பணியின்போது இவர்களின் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட பரமத்தி வேலூர் காவல்துறை உதவி ஆய்வாளர் பிரபு அவர்களைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.
இதில் பிடிபட்டவர்கள், மகாராஷ்டிர மாநிலம், அர்தாபூர் பகுதியைச் சேர்ந்த பாலு சாய்ராம் முகத்தி (40). அவரது மனைவி தேவிகா (30), மகன் ராஜேஷ் (11), அவரது உறவினர்கள் விஜய் (16), ஆர்த்தி (10) ஆகியோர் என்பதும், இவர்கள் வேலைவாய்ப்பின்றி கரூர் அருகே வாங்கப்பாளையத்தில் தங்கி காவிரி ஆற்றில் உள்ள ஆகாயத் தாமரைகளை எடுத்து வந்து அதன் இலைகளை நீக்கி விட்டு தண்டுகள் மீது வர்ணங்கள் பூசி வண்ணப் பூச்செடிகள் எனக் கூறி விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து பரமத்தி வேலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.