பரமத்தி ஒன்றியத்துக்குள்பட்ட வீரணம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திருச்செங்கோடு ஒன்றியம், விட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிகள் இணைந்து நடத்திய பள்ளி பரிமாற்றத் திட்டத்தின் 6-ஆம் நாள் நிகழ்வு வீரணம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு ஒன்றியத்துக்கு உள்பட்ட விட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளி பரிமாற்றத் திட்டத்தையொட்டி வீரணம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வருகை புரிந்தனர். வீரணம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியை சாந்தி வரவேற்றுப் பேசினார்.
இரு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இணைந்து கல்வி கற்றல், அறிவியல் செயல்பாடுகள், கணித மேம்பாடுகள் போன்ற படைப்புகளை செய்து காட்டியும், விளக்கமும் அளித்தனர். நிகழ் கல்வியாண்டில் பள்ளி பரிமாற்றம் திட்டம் சார்ந்த ஐந்து நாள் நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டு கண்காட்சியாக வைக்கப்பட்டது.
மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்காட்சி மற்றும் பள்ளி வளாகத்தில் உள்ள மூலிகைப் பண்ணைகளை பார்வையிட்டனர். இதன் நிறைவு விழாவில் பரமத்தி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அருள்புனிதன் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் வரதப்பன் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ரேவதி, ஆசிரிய பயிற்றுநர் நிர்மலாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் இரு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரிய,ஆசிரியைகள்,மாணவ,மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக கணித ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.