நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் முதன் முறையாக முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் மலைவேப்பங்கொட்டை, உத்திரகிடிகாவல் கிராமத்தைச் சேர்ந்த கந்தன் மனைவி நல்லம்மாள், கூலித் தொழிலாளி இவர், அண்மையில் நேரிட்ட விபத்தில் முதுகு தண்டுவடத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு கால்கள் செயல் இழந்த நிலையில், நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை எலும்பு முறிவு பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் லீலாதரன், மனோகரன், குமரவேல், மயக்க மருத்துவர் ஸ்ரீதேவி உதவியுடன் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு நல்லம்மாள் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது நடைப்பயிற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்த மருத்துவக் குழுவினரை மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் சரஸ்வதி பாராட்டினார். நாமக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பாளர் செல்வகுமார், நிலைய மருத்துவர் கண்ணப்பன் ஆகியோர் முழு உதவி புரிவதால் இவ்வகையான தரமான அறுவை சிகிச்சையை இங்கு மேற்கொள்ள முடிந்தது என எலும்பு முறிவு மருத்துவர் லீலாதரன் தெரிவித்தார்.