ராசிபுரம் அருகே அரியாகவுண்டம்பட்டியில் லாரி ஓட்டுநரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, ரொக்கம் ரூ. 20 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
அரியாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன் (50), லாரி ஓட்டுநர். இவர், சில தினங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள தனது மாமனார் வீட்டுக்குக் குடும்பத்துடன் சென்றிருந்தார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஊர் திரும்பிய அவர் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த சுமார் 15 பவுன் நகை, ரொக்கம் ரூ. 20 ஆயிரம் திருடுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர் அளித்த புகாரின்பேரில் நிகழ்விடம் சென்ற நாமகிரிபேட்டை போலீஸார் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் தடயங்களைப் பதிவு செய்தனர்.