நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண்மை துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் சோலார் விளக்கு பொறி அமைப்பது குறித்து செயல்விளக்கம் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. அட்மா திட்டத்தில் 2017-18 ம் நிதி ஆண்டில் ஊனந்தாங்கல் கிராமத்தில் செல்வம் என்பவர் தோட்டத்தில் நாமகிரிப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குநர் பொ.அசோகன் தலைமையில் சோலார் விளக்குப் பொறி குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
சோலார் விளக்குப்பொறி பற்றியும் அதன் பயன்களான பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் விளக்கம் அளித்தனர். மாலை நேரத்தில் தீமை செய்யும் பூச்சிகள் அதிகம் நடமாட்டம் இருப்பதால், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அமைக்க வேண்டும். அதனால் பறக்கும் பூச்சிகளான தண்டு துளைப்பான், பழம் துளைப்பான், தத்துப் பூச்சிகள் ஆகியவற்றின் தாய் அந்துப் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். மேலும், ஒரு தாய் அந்துப்பூச்சியை கவர்ந்து அழிப்பதின் மூலம் 300 முதல் 400 வரையிலான பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும். விளக்குப் பொறியைப் பயன்படுத்துவதன் மூலம் நன்மை மற்றும் தீமை செய்யும் பூச்சிகளை எளிதாக இனம் கண்டறிந்து உரிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ள முடியும். மேலும், ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ள இயலும்.