ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியின் மாணவ, மாணவியர் பொங்கல் விழாவினை பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து வந்து கரும்பு, மஞ்சள் வைத்து சூரியனுக்கு படையலிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.
ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியின் மாணவர்கள் ஒன்றிணைந்து பொங்கல் சமைக்க முடிவு செய்தனர். இதனையடுத்து மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், தொண்டு நிறுவனத்தின் ஒன்றிணைந்து தலைமையாசிரியர் கு.பாரதி தலைமையில் பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர். முன்னதாக மாணவ, மாணவியர் வேட்டி சேலை அணிந்து வந்தது அனைவரையும் கவருவதாக இருந்தது. பின்னர் மஞ்சள் கொம்பு கரும்பும் கட்டி வைத்து புதுப்பானையில் பொங்கலிட்டனர். இதில் ராசிபுரம் எஜூகேசனல் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் எல்.தருண்குமார், செயலர் பாலவெங்கடமணி, ஜேசிஸ் சங்கத் தலைவர் சசிரேகா, அறிவியல் இயக்க ராசிபுரம் கிளை தலைவர் துரைசாமி, வனிதா கிளப் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வெற்றி விகாஸ் பள்ளியில் பொங்கல் விழா: ராசிபுரம் கீரனூர் வெற்றி விகாஸ் - ஸ்ரீசைதன்யா கல்விக் குழுமங்களின் பள்ளிகள் சார்பில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் போகித் திருவிழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் வழிபாட்டுத் திடல் வண்ணக் கோலங்களால் அலங்கரிக்கப்பட்டு, போகிக் குண்டம் உருவாக்கப்பட்டது. ஆசிரிய, ஆசிரியைகளும், மாணவர்களும், பெற்றோர்களும், பணியாளர்களும் போகிக் குண்டத்தை சுற்றிலும் கூடி வழிபாடு செய்த பின், போகித் தீ மூட்டினர்.
மாணவர்கள் சிறு சிறு தாள்களில் தங்களிடம் ஏதேனும் தீய பழக்கங்கள் இருப்பின் இந்த போகி முதல் அப் பழக்கத்தை நான் போகித் தீயில் இட்டு கொளுத்துவதன் மூலம், நல்ல ஒழுக்கம் மிகுந்த மாணவர்களாக மாறுவோம் என்று சங்கல்பமேற்று, அதனை போகித் தீயிலிட்டு வணங்கினர். பின்னர் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அனைவருக்கும் போகி மற்றும் பொங்கல் வாழ்த்துகளை கல்வி நிறுவனங்களின் இயற்பியல் துறை இயக்குநரும் பள்ளியின் நிர்வாக அலுவலருமான கே. சந்திரசேகரன் தெரிவித்தார்.
கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கே. குணசேகரன், தலைவர் ஜி.வெற்றிச்செல்வன், செயலாளர் பாலசுப்ரமணியன், இணைச்செயலாளர் ஆர்.யு. சிற்றரசன், பொருளாளர் பழனிவேலு, தாளாளர் ஜி.விஜய் இயக்குநர்கள் துரைசாமி, சந்திரசேகரன், மாரிமுத்து, ரவி, தாசப்பிரகாசம், ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்களின் துணைப்பொது மேலாளர் சுரேஷ் பாபு, ஒருங்கிணைப்பாளர் ராம்பிரசாத், துர்க்கபிரசாத், நரசிங்க ராவ், பள்ளி தலைமையாசிரியர்கள் ஜேம்ஸ் டேனியல் அற்புதராஜ், ரம்யா ராணி, ஜெ. சுதர்சனா உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களுக்கு பொங்கல் வழங்கியும், வாழ்த்து தெரிவித்தனர்.