நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை காவலர்கள் குடியிருப்பில் வசிக்கும் தலைமைக் காவலர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
நாமகிரிப்பேட்டை புதுக்காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் பி. மாதவன் (47). இவர், பேளுகுறிச்சி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம்.
இதனால், மனைவி கலைச்செல்வியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், வேலைப்பளு காரணமாக அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டு அறையில் தூங்கச் சென்றவர், ஞாயிற்றுக்கிழமை காலை நெடுநேரமாகியும் அறையிலிருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் ஜன்னலைத் திறந்து பார்த்தபோது மின்விசிறியில் அவர் தூக்கிட்டு இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த நாமகிரிப்போட்டை காவல் ஆய்வாளர் மணிகண்டன், சடலத்தை கைப்பற்றி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த தலைமைக் காவலர் மாதவனுக்கு இரு மகன்கள் உள்ளனர்.