தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 11 பேர் பலியான சம்பவத்தைக் கண்டித்து நாமக்கல்லில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், போராட்டத்தின் 100-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியபோது, போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இதைக் கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 11 பேர் பலியாயினர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்தும் 11 பேரின் உயிரிழப்புக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வலியுறுத்தியும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கக் கோரியும் நாமக்கல் பூங்கா சாலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் மாவட்டச் செயலர் ரா.குழந்தான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகரச் செயலர் என்.தம்பிராஜா, மாநிலக் குழு உறுப்பினர் கே.மணிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.